Wednesday, 31 October 2018

எது கெடும்

01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.

11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.

21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும்  கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.

31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.

41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.

51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

Monday, 8 October 2018

துறவியின் அன்பு


குறள் :
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்.

குறள் விளக்கம் :
தீமை செய்பவர்களை தண்டிக்க அவர் வெட்கப்படும்படியாக நன்மையை செய்துவிடுங்கள்.

கதை :
ஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.

அதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார்.

அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே துறவி, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார், அவன் பயத்துடன் தயங்கினான். அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள்.

அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினார், ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா?

துறவி கூறியதைக் கேட்டவுடன் அவர் பாதங்களில் தடால் என்று விழுந்து அழுதான் அந்த இளைஞன்.

நீதி :
நமக்கு ஒருவர் தீமையை செய்தாலும் அவர்களுக்கு நாம் நன்மையை மட்டுமே செய்ய வேண்டும்.