Tuesday, 27 May 2025

நலம் விரும்பு


அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோ?
கரும்பு கோணிடில் கட்டியும் பாகும் ஆம்,
இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்,
நரம்பு கோணிடில் நாம் அதற்கு என் செய்வோம்?  .

     மலர் அரும்பானது கோணினால், அந்த அரும்பானது தனது மணத்தில் குறையுமோ? குறையாது.

     கரும்பு கோணினால், அது சுவை உள்ள வெல்லக் கட்டி ஆகவும், வெல்லப் பாகு ஆகவும் பயன்படும்.

     இரும்பானது வளைந்து அங்குசம் ஆனால், அதைக் கொண்டு அடங்காத யானையையும் அடக்கலாம்.

     ஆனால், உடலில் உள்ள நரம்பானது கோணி, ஒருவனுக்கு மரணம் சம்பவிக்குமானால், அந்த உடல் ஒன்றுக்கும் உதவாது. உடம்பு அவ்வாறு ஆனதை எந்த உபாயத்தால் சீர் செய்வோம்.

Sunday, 11 May 2025

எல்லோரையும் பகைத்துக் கொள்ளாதே

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.



தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.



தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.



தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.