மகாபெரியவா மடத்துல இருக்கிற சமயங்கள்ல
அடிக்கடி வித்வத் பரீட்சைகள் நடக்கும்.
அதாவது பலரும் வந்து தாங்கள் கத்துண்ட விஷயங்களைக்
குறித்து பெரியவா முன்னிலையில் விவாதம் பண்ணுவா.
அந்த சமயத்துல பலருக்கும் தெரியாத புதுப்புது விஷயங்கள்,
தத்துவங்கள் மகாபெரியவா திருவாக்குலேர்ந்து வெளிப்படும்.
அந்த மாதிரியான விளக்கத்தை அதுவரைக்கும் எந்த வேத
புராணத்துலயும் சொல்லியிருக்க மாட்டா. அப்படி ஒரு
தெய்வீகமான வாக்கு. கேட்கறதுக்கு ரொம்பவே புண்ணியம்
பண்ணியிருக்கணும்னு எல்லாருமே சொல்வா.
ஒரு சமயம் அப்படித்தான் வேதம்,சாஸ்திரம், புராணம்னு
எல்லாத்தையும் மையமா வைச்சு நடந்துண்டு இருந்த
ஒரு விவாதம்,திடீர்னு சாப்பாட்டைப் பத்தி திசை திரும்பித்து.
'குழம்புக்கும்,ரசத்துக்கும் என்ன வித்தியாசம்?"
இப்படி ஒரு கேள்வியை எழுப்பினார் ஒருத்தர்.
"ரெண்டுலயுமே பருப்பு,மஞ்ச பொடி, புளி,சாம்பார் பொடி,
பெருங்காயம்,உப்பு,கறிவேப்பிலை,கொத்தமல்லி எல்லாம்
சேர்க்கறா.ஒரே ஒரு வித்யாசம், குழம்பு கெட்டியாய்
இருக்கும். ரசம் தீர்க்க இருக்கும்!" இந்த மாதிரி ஆளாளுக்கு
ஒவ்வொண்ணை சொல்லிண்டு இருந்தா.
எல்லாத்தையும் கேட்டு ரசிச்சுண்டு இருந்தார் மகாபெரியவா.
ஒரு கட்டத்துல, யார் சொன்ன விளக்கம் சரின்னு கேள்வி
வந்து,தீர்ப்பு மகாபெரியவாதான் சொல்லணும்னு
எல்லோரும் கேட்டுண்டா.
அமைதியா சிரிச்ச பரமாசார்யா,"எல்லாரோட
விளக்கத்தையும் கேட்டேன் என்னோடதைக் கேட்கலையே.!".
அப்படின்னார்.
எல்லாரும் ரொம்ப ஆர்வமா.."மன்னிச்சுக்குங்கோ பெரியவா..
உங்க விளக்கத்தை எங்களுக்கு சொல்லி அருளுங்கோ!"ன்னு
வேண்டிண்டா.
புன்னகைச்ச பரமாசார்யா,"குழம்புல தான் இருக்கும். ரசத்துல
தான் இருக்காது!"அப்படின்னு சொல்லி கொஞ்சம் நிறுத்தினார்.
"குழம்புல போடற காய்கறியை,'தான்'னு சொல்றது வழக்கம்.
ரசத்துல காய்கறி எதுவும் போடறதில்லை..!' அதைத்தான்
சொல்றார் பெரியவாள்னு விஷயம் புரியாதவா
நினைச்சுண்டா. விஷயம் புரிஞ்சவா,"ஆஹா..ஆஹா...
அற்புதமான விளக்கம்!"னு குரல் எழுப்பினா.
எல்லா விஷயமும் எல்லாருக்கும் தெரியணும்னு நினைக்கற
மகாபெரியவா தான் சொன்ன விளக்கத்தை எல்லாருக்கும்
புரியறமாதிரி விளக்க ஆரம்பித்தார்.
"தான் அப்படிங்கற ஆணவம் வந்துட்டா,எல்லாமே
குழப்பமாயிடும். அதை அகற்றினாத்தான் தெளிவு பிறக்கும்.
குழப்புத்துல தான் இருக்கும்னு உணர்த்தறது குழம்பு.
தெளிவுல தான் இருக்காதுன்னு உணர்த்தறது ரசம்!"
கொஞ்சம் விளக்கமா சொன்ன பெரியவா, சுத்தி
இருந்தவாளைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.
"எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல
எடுத்துக்குவேள்"
"மொதல்ல சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம்,
பட்சணம்,கடைசியா மோர்" அங்கே இருந்த பலர்
சேர்ந்து சொன்னா.
"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?"
கேட்ட மகாபெரியவா, யாரும் பதில் சொல்லாத்தால் தானே
அதற்கு விடை சொல்ல ஆரம்பிச்சார்.
"மொதல்ல குழம்பு.இதுல, 'தான்' இருக்கு. பொறந்து வெவரம்
தெரிஞ்சதுமே தான்கற அகங்காரம் மனசுல வந்துடறது.
அதனால் நாம குழம்பிப் போயிடறோம்.அந்தத் தானை
கொஞ்சமா தீர்த்துட்டு, அடுத்தகட்டத்துக்குப் போறோம்.
அப்போ தான் இல்லாத்தால் ஒரு தெளிவு வந்துடறது.
அதாவது ரசமான மன நிலை.அதான் ரசம்.
தான் இல்லாம தெளிவா இருக்கற மனசுல ரசமான எண்ணம்
வருது. அது வந்ததும் எல்லாமே இனிப்பா பாயசமாகவும்,
பட்சணமாகவும் இருக்கு.
கடேசியா மோர்.பால்லேர்ந்து தயிர் கிடைக்கறது.
அதுலேர்ந்து வெண்ணெய் எடுக்கறா. அதைக் காய்ச்சி நெய்
வர்றது. இதெல்லாம் எடுத்தப்புறம் மிஞ்சி இருக்கிறது மோர்.
அதாவது மோர்லேர்ந்து எதையும் பிரிச்சு எடுக்க முடியாது.
அதாவது மோருக்கு அடுத்த பிறவி இல்லை.
நாமளும் அகங்காரத்தைவிட்டு மனசு தெளிஞ்சு ரசமா
வாழ்க்கையை அனுபவிச்சு,யாருக்கும் எந்த உபத்ரவமும்
பண்ணாம எல்லாருக்கும் இனிமையாக வாழ்ந்து கடேசில
பரமாத்மாவோட கலந்துட்டா. அதுக்கு அப்புறம் எதுவுமே
இல்லை. அதாவது 'நோ மோர்!"
சாதரணமான மக்களுக்கும் இந்த அடிப்படை விஷயம்
போய்ச் சேரணும். ஒவ்வொரு நாளும் போஜனம்
பண்ணறச்சே ஒரு நிமிஷமானும் இதை நினைச்சுப்
பார்த்து எல்லாரும் பகவானோட திருவடியைப்
பற்றிக்கணும். அப்படிங்கற உயர்வான எண்ணத்துலதான்
நாம தினமும் அனுசரிக்கற போஜன முறையையே நம்ம
வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தற மாதிரிதான்
அமைச்சிருக்கா!" சொல்லி முடிச்சார் மகாபெரியவா.
No comments:
Post a Comment