நான்கு வரியில் நறுக்கென்று இறை தத்துவத்தை சொல்லிவிட்டார் சிவவாக்கியர்..
"ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே.
சிவவாக்கியர்
பொருள்
அறிவு சொரூபமான, அடி முடி காணமுடியாத,எங்கும் நிகழ்ந்த ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள்.
அவன் உங்கள் உடம்பின் உள்ளே கலந்து அறிவாகவும்,ஆற்றலாகவும் விளங்குவதைக் காணாது,அவனை நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும், அலைந்தும் காண முடியாமல் ஆயுள் நாட்கள் கழிந்து போய்க் கொண்டிருக்கிறது.
உடலுக்குள் உயிராகவும், உயிருக்குள் அறிவாகவும் அவன் உட்கலந்து நிற்பதை அறிய முடியாமல் மாண்டு போகும் மனிதர்கள் எண்ணற்ற கோடி.
இம்மானிடப் பிறவியை பெற்ற இவர்கள் என்றுதான் அறிவான(ஜோதி) இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோ?
தம்முளே உறையும் உயிரை உணர்ந்து, உயிரை ஈசனிடம் சேர்த்து பிறவா நிலையை அடைய முயலாமல் அவனை அகிலமெங்கும் தேடி ஓடி நாடி வாடி இறந்து போகின்றனரே என்று சிவவாக்கியர் கூறுகிறார்.
No comments:
Post a Comment