Saturday, 1 September 2018

தெய்வமுண்டு

ஒரு அரசனுக்கு கல்வியறிவற்ற மகன் இருந்தான். தலைசிறந்த ஆசிரியர்கள் போதித்தும் அவனுக்கு படிப்பு வரவில்லை. தந்தை காலமான பிறகு அவன் பட்டத்துக்கு வந்தான். அரசவையில் நிறைய பேர் இருந்ததைக் கண்டான்.

இத்தனை பேருக்கு ஏன் சம்பளம் கொடுக்க வேண்டும்? தேவையானவர்களை வைத்துக் கொண்டு மற்றவர்களை விலக்க வேண்டும் என்று முடிவு செய்தான். அதற்காக ஒரு பரீட்சை வைத்தான்.

ஒரு மந்திரியைப் பார்த்து, “நீர் இந்த சபைக்குத் தேவை தானா? என்பதை விளக்கிச் சொல்லும்,” என்றான்.

மந்திரியும், “உங்களுக்கு ஆலோசனை சொல்வதற்காக நான் அவசியம்” என்றார்.

சேனாதிபதியைப் பார்த்து, “நீ தேவையா?” என்றான் அரசன்,
“அரசே! எதிரி நாட்டுப்படைகள் வரும் போது படை நடத்திச் செல்ல சேனாதிபதி தேவை,” என்றான்.

“சரி உட்கார்,” என்றான் அரசன்.

இப்படியே ஒவ்வொருவராக கேட்டு வரும் போது, புலவர் ஒருவரிடம், “நீர் தேவையா?” என்றான்.
அந்த புலவர் இறை பக்தியுள்ளவர்.

“அரசே! தங்களுக்கு மனச்சங்கடம் வரும் போது நீதிகளை எடுத்துச் சொல்லி தங்கள் மனதை துன்பத்தில் இருந்து விடுபட வைப்பது என் கடமை. அதையும் இறைவன் தான் செய்கிறான். ஆகவே இறைவன் திருவருளால் நான் இருக்கிறேன்,” என்றார்.

அரசனுக்கு கோபம் வந்து விட்டது

நான் சம்பளம் கொடுத்து இவரைக் காப்பாற்றுகிறேன். இவரோ கடவுள் அருளால் இருப்பதாகச் சொல்கிறாரே! இவரை வேலையை விட்டு மட்டுமல்ல, உலகை விட்டே அனுப்பி விட வேண்டும்” என கர்வத்துடன் நினைத்து, “நீர் இங்கே இருக்க வேண்டுமானால் 3 கேள்விகள் கேட்கிறேன்.

அதற்கு நாளை காலை  பதில் சொல்ல வேண்டும் இலலையேல் உம்மை சிரச்சேதம் செய்து விடுவேன்,” என்றான்.
அவன் கேட்ட கேள்விகள்:

கடவுள் எங்கே இருக்கிறார்?
அவர் எந்தப் பக்கம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்?
அவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்?

புலவர் வீடு வந்து சேர்ந்தார்.

கல்வியறிவு இல்லாத அரசனுக்கு, இதை எப்படி கூறி விளங்க வைப்பது என்ற கவலையில் இருந்தார்.

புலவருக்கு ஒரு மகள்  இருந்தாள். அவள் தன் தந்தை கவலையாக இருப்பதைப் பார்த்து என்ன என்று கேட்டாள்.
தந்தையும் அரசன் கூறியதைக் கூறினார்.

“அப்பா!  நீங்கள் பயப்பட வேண்டாம். நாளை காலை அரச சபைக்கு நானே சென்று விடையளிக்கிறேன்,” என்றாள்.

மறுநாள் புலவருக்கு பதில் அவர் மகள் வந்திருப்பதை அறிந்த அரசன், “ஏன் நீ வந்திருக்கிறாய்?” என்று கேட்டான்.
“நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் சிறியது. ஆகவே தந்தை என்னை அனுப்பியிருக்கிறார்” என்றாள்.

“அப்படியா? பதில் சொல்லவில்லை என்றால் சிரச்சேதம் நடக்கும் என்பதை அறிவாயா?” என்று கூறிய அரசனிடம் சற்றும் கலங்காமல் சிறுமி பதிலளித்தாள்.

“அரசே! கடவுள் எங்கே இருக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டுமானால், ஒரு நிபந்தனை! நான் பதில் சொல்லும் போது நான்
கேட்பவற்றை கொடுக்க வேண்டும். ஏன்? எதற்கு என்று கேட்கக் கூடாது,” என்றாள்.

அரசனும் சரி என்றான்.

சிறுமி ஒரு பாத்திரம் நிறைய பால், ஒரு மேஜை வேண்டும் என்றாள்.
அவை உடனே வந்தன.

“அரசே! இந்தப் பாத்திரத்தில் என்ன இருக்கிறது” என்று அரசனிடம் கேட்டாள்.

“பால்”  இருக்கிறது என்றான் அரசன்

பால் மட்டுமா இருக்கிறது.உள்ளே தயிர்,வெண்ணை,நெய் எல்லாம் இருக்கிறதல்லவா? என்றாள்.

அவன் விழிக்க, “பாலில் இருந்து தான் நெய் எடுக்கப்படுகிறது. ஆனால், அது நம் கண்ணுக்கு தெரிவதில்லை. காய்ச்சி எடுத்தால் வெண்ணெய் திரண்டு, வெண்ணெயைக் காய்ச்சினால் நெய் கிடைக்கிறது என்றான்

பாலில் நீக்கமற நிறைந்துள்ள நெய் போல, கடவுள் எங்கும் நீக்கமற இருக்கிறார்,” என்றாள் அந்த சிறுமி.

கடவுள் எந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று அரசன் கேட்டான்

அருகில் இருந்த தீபத்தை காட்டி,
இந்த சுடரின் ஒளி எந்த பக்கத்தில்  தெரிகிறது  என்று கேட்டாள்.

எல்லாப் பக்கமும் தெரிகிறது என்றான் அரசன்.

“கடவுளும் எல்லா பக்கமும் பார்த்துக் கொண்டிருக்கிறார்,” என்றாள் சிறுமி.

அவர் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டதும், “அரசே! இதற்கு பதில் கூற என்னை 10 நிமிடம் என்னை அரசியாக்க வேண்டும்”.நீங்கள் அரச பதவியை 10 நிமிடம் துறக்க வேண்டும் என்றாள்.

அரசனும் சம்மதித்தான். “இவள் என்ன சொன்னாலும் நிறைவேற்றுங்கள்,” என்று கட்டளையிட்டான். அவள் சிம்மாசனத்தில் அமர்ந்தாள்.

“இதோ! இந்த முன்னாள் அரசனை சிறையில் போடுங்கள்,” என்றாள்.
காவலர்கள் தயங்கினர். ஆனால் அரசன் அதை மனமுவந்து ஏற்று சிறைக்குச் சென்றான்.

அரசியின் அடுத்த உத்தரவுபடி அமைச்சர் நீக்கப்பட்டு, தெருவில் திரிந்த ஒரு பிச்சைக்காரன் மந்திரியாக்கப்பட்டான்.

அடுத்து அந்த ஊரின் பணக்காரக் குடும்ப சொத்தை ஜப்தி செய்து, அவரை கைது செய்ய உத்தரவிட்டாள்.

இவ்வளவும் 3,4 நிமிடத்துக்குள் நடந்து முடிந்தன. 9 நிமிடம் ஆனதும் நான் கொடுத்த உத்தரவுகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுகிறேன். அது அது அந்த அந்த இடத்துக்கு வரட்டும்,” என்று சொல்லி சிம்மாசனத்தை விட்டு இறங்கினாள். அரசனும் சிம்மாசனத்தில் அமர்ந்தான்.

சிறுமி அரசனிடம், “மேட்டை பள்ளமாக்குவதும், பள்ளத்தை மேடாக்குவதும், ஏழையை பணக்காரனாக்குவதும், பணக்காரனை ஏழையாக்குவதும் ஆகிய இதுபோன்ற செயல்களை எல்லாம் கடவுள் செய்து கொண்டிருக்கிறார்,” என்றாள்.

அரசனுக்கு புத்தி வந்தது. புலவர்கள் இருப்பதால்தான் அரசன் நீதி தவறாமல் ஆட்சிபுரிய முடிகிறது என்பதை உணர்ந்துகொண்டான்

No comments: