Sunday, 6 October 2024

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த

ஒவ்வொரு நாள் காலையிலும் சில சிந்தனைகள் நம்மை ஆக்கிரமிப்பது உண்டு. 

இன்று பொய்யைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு இருந்தேன்.

பொய் பேசுவது சரியா தவறா எனத் தெரியவில்லை. ஆனால் சில பொய்கள் சாதித்து இருக்கின்றன, சில வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கின்றன.

சொல்லிய பொய்யை நிஜமாக்க முயன்றவன் வெற்றியாளன் ஆகிறான் என்று தெரிகிறது. சொல்லிய பொய்யைச் சொல்லிக் சொல்லி வாடிக்கை ஆக்கிக் கொண்டவன் வேடிக்கை மனிதனைப் போல் வீழ்ந்து போகிறான்.

வேஷமிட்ட பொய்களைத் திறமை என்றும் சாதுர்யம் என்றும் புத்திக் கூர்மை என்றும் அழைக்கிறோம். தவறில்லை. 

நீ சொல்லும் பொய்கள் உனக்கும் மற்றவருக்கும் தீங்கு செய்யாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

மெய்யென்று மேனியை யார் சொன்னது என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
காயமே இது பொய்யடா என்று நாம் அடிக்கடி உபயோகிப்பதும் நினைவுக்கு வருகிறது. 

ஒரு பயணி எப்படி இலக்கை அடையும் வரை உடலைப் பாதுகாப்பாரோ அப்படி பாதுகாத்தால் போதும்.

இலக்கியங்களை உருவாக்கும் உயர்வான பொய்களை உருவாக்குவதில் உடன்பாடு உண்டு.

தான் சொல்லிய நினைத்த பொய்களை மனதால் உண்மையென தானே நம்பி வீழ்ந்தவர் பலர்.

உண்மையை விட்டு வெகுதூரம் போய்விடாமல் இருப்பதே நலம் என்பது முன்னோர் வாக்கு.

No comments: