Thursday, 19 September 2024

ஞானியின் பார்வையில்

ஒரு நாளில் ஒரு முறையேனும் 
ஓம் நமச்சிவாய எனக் கூறுங்கள்

 நமச்சிவாய மந்திரம்
 நாளும் நலம் தரும் மந்திரம் 

 உயர்வு தாழ்வு

  ஸ்ரீ ரமணர். அறிவுரைகள் 

திருவண்ணாமலை ஆஸ்ரமத்தில், மரநிழலில் ரமணர் பக்தர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். 

அந்த நேரத்தில், வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கு வந்தார். தரையில் அமர முயற்சித்தார். 

ஆனால், அவரால் காலை மடக்க முடியவில்லை. 

எனவே, ஒரு நாற்காலியைத் தூக்கி வந்து அதில் உட்கார்ந்தார். 

உபதேசம் செய்யும் குரு கீழேயும், பக்தர்கள் ஆசனத்திலும் அமர்வது கூடாது 

என்ற விஷயத்தை வெளிநாட்டுக்காரர் அறிந்திருக்க நியாயமில்லை. 

இதைக் கண்ட ஆஸ்ரம நிர்வாகிக்கு 
கோபம் பொத்துக் கொண்டு வந்தது. 

வெளிநாட்டுக் காரரிடம் வந்து, கீழே அமரும்படி மெதுவாக தெரிவித்தார். 

அவரோ, தன்னுடைய இயலாமையைத் தெரிவித்தார். 

அப்படியானால் அங்கிருந்து வெளியேறும்படி நிர்வாகி அறிவுறுத்தினார். 

வாடிய முகத்துடன் ஆஸ்ரமத்தை 
விட்டுப் புறப்பட்டார் வெளிநாட்டவர்.

அப்போது ரமணர் நிர்வாகியிடம், என்னப்பா ஆச்சு...??? என்று அழைத்தார். 

ஒண்ணுமில்லே சுவாமி. அவரால் கீழே உட்கார முடியாதாம்.

 நாற்காலியில தான் உட்கார முடியுமாம். அதனால் தான்

 வெளியேறும்படி அனுப்பி விட்டேன், என்றார் மெதுவாக. 

ரமணர், அந்த நிர்வாகியிடம் மரத்தை அண்ணாந்து பார்க்கச் சொன்னார். 

அதில் ஒரு குரங்கு அமர்ந்திருந்தது. 

இதோ மரத்து மேலே குரங்கு இருக்கு பார். 

அதுவும் என்னை விட உசரமான இடத்தில் தான் இருக்கு....!!! 

அதையும் வெளியில் அனுப்பி விடுவோமா...??? என்றார் பவ்யமாக. 

அமைதியாக நின்ற நிர்வாகியிடம், யாரும் உலகத்தில உசத்தியும் இல்லே, தாழ்ச்சியும் இல்லே....!!! 

அவரை உடனே கூப்பிடுங்க! என்று அழைத்து வரச் சொன்னார். 

உயர்வு தாழ்வு கருதாத 
ரமணரின் ஞானநிலை.

No comments: